M. Trotsky Marudu
Freelancer Painter, Illustrator and Special Director for Films

Home

வலைதளம்

Blogs - வல்லரசு கனவு நினைவாகுமா

வல்லரசு கனவு நினைவாகுமா

Posted on Nov. 21, 2011 01:17:40
முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் 2020ல் இந்தியா வல்லரசாகும் அதற்காக இளைஞர்கள் இப்போதே கனவு காண வேண்டும் என்று சொன்னார் நாலைந்து வருடங்களுக்கு முன்பு. 2020ல் இந்தியா - வல்லரசு. இந்த வார்த்தைகள் அப்துல் கலாமை தொலைக்காட்சியில் பார்க்கும் போது, செய்திதாளில் அவர் படத்தை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வரும்.

ஆனால் இப்போது அந்த வார்த்தைகளை தாண்டி இந்தியா வல்லரசாகுமா என்ற சந்தேக கவலை நம்மை அரிக்கிறது.

இந்தியா ஏன் வல்லரசாக வாய்ப்பு இல்லை..?

ஏன் இந்த சந்தேக கவலை..?

காரணம் இன்றைய இந்தியாதான். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்திஜி. ஆனால் இன்று இந்தியாவில் கிராமபுற மக்கள் தொகை விகிதத்தை விட நகர் புற மக்கள் தொகை விகிதம் அதிகமாகிவிட்டது. கிராமங்களும் தனது அடையாளத்தை தொலைத்து கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறது . அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு, இப்போது அந்த அடையாளமும் காணபடவில்லை, விளை நிலங்கள் எல்லாம் இப்போது வீட்டு மனைகள் என்றாகிவிட்டது.

சென்னையை விட்டு வெளியே பஸ்சில் பயணிக்கும் போது பச்சை பசேல் வயல், பச்சை பட்டு போர்த்தியது போல் சாலையின் இருபக்கமும் அழகாக தெரியும், ஆனால் இப்போது அது இல்லை , காரணம் விவசாயம் இப்போது கட்டுபடியாகும் தொழில் அல்ல , விவசாயிகள் மீது எந்த அரசும் கருணை காட்டவும் தயாராக இல்லை.

தொழிற் புரட்சி என்ற பெயரில், தாராள மயமாக்கல் என்ற பெயரில் பல தொழில்கள் இப்போது தனியார் வசம். தொலைதொடர்பு , மோட்டார் வாகனம் என்று எங்கும் தாராள மயமாக்கல் என்ற பெயரில் தனி நபர் வசம் போய் சேர்ந்து விட்டது.

புதிய பொருளாதார கொளகை , தாராள மயமாக்கல் இவற்றால் இந்தியா வளர்ந்ததா.? இந்தியாவின் கடன் சுமை குறைந்ததா..? நிதி அமைச்சர் தனது ஆண்டு வரவு செலவு திட்டத்தில் வரியை குறைத்தாரா ..? இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில் இல்லை என்பதுதான். நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை முப்பத்தி இரண்டு கோடி என்று இருந்தது. தற்போது அது நாற்பது கோடி என்று உயர்ந்துவிட்டது . இது மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது .

ஆண்டுக்கு வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடையில் குடும்ப அட்டைக்கு எந்த பொருளும் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் எடை சரியாக இருக்காது. ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தபடுகிறது. பலருக்கு குடும்ப அட்டையும் இல்லை என்பது இன்னொரு சோகம். ஆனால் லட்ச கணக்கில் போலி குடும்ப அட்டை புழக்கத்தில் இருப்பதை அரசே ஒப்பு கொள்கிறது .

அப்புறம் எப்படி வறுமை ஒழியும் ,ஆனால் அரசியல் தலைவர்களின் ஆண்டு வருமானம் மட்டும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக பிரபு பட்டேல் தேர்தலின் போது தனது சொத்து மதிப்பு எழுபத்தி ஒன்பது கோடி ரூபாய் என்று தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருந்தார் . ஆனால் இப்போது பிரதமர் அமைச்சர்கள் தனது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து பிரபு பட்டேல் தனது சொத்து மதிப்பு நூற்றி இருபத்தி இரண்டு கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்று இருபத்தெட்டு மாதத்தில் நாற்பத்தி மூன்று கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் விமான போக்குவரத்து துறை அமைச்சர். ஆனால் அவர் இலாக்கா பொறுப்பில் இருக்கும் ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. இதேபோல் அமைச்சர் ஜெகத் ரட்சகன் தேர்தல் நேரத்தில் வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 5.9 - அதாவது ஆறு கோடிக்கும் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார் .

ஆனால் பிரதமர் அலுவலக இணைய தளத்தில் ஜெகத் ரட்சகன் தனது சொத்து மதிப்பு எழுபது கோடி ரூபாய் என்று தெரிவித்து இருக்கிறார் . ஜெகத் ரட்சகன் இந்த இருபத்தெட்டு மாதத்தில் அப்படி என்ன தொழில் செய்தார் என்று தெரியவில்லை அவரது வருமானம் பனிரெண்டு மடங்கு உயர்ந்து இருக்கிறது . இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாக தான் இருக்கிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணம் சேர்த்து பெரிய பணக்காரகளாக இருக்கிறார்கள் . இந்தியாவின் அரசியல் சட்டம் இந்திய அரசு எல்லாம் ஏழைகளுக்கு இல்லை என்பது தான் நிஜம்.

இந்தியாவில் ஊழல் என்பது வைரஸ் கிருமி என்று ஆகிவிட்டது. பாமாயில் இறக்குமதி ஊழலில் ஈடுபட்ட ஒருவரை ஊழல் கண்காணிப்பு இயக்குனராக நியமிப்பதில் காட்டிய பிடிவாதம் ஒன்றே போதும் இந்த அரசுக்கு ஊழலை ஒழிப்பதில் எவ்வளவு அக்கறை என்பது , உச்சநீதிமன்றம் தலையில் குட்டி அவரை அந்த பதவியை ராஜினாமா செய்ய வைத்தது.

2ஜி அலைக்கற்றை ஊழல் , காமன் வெல்த் ஊழல் எல்லாம் லட்சகணக்கான கோடியை கபளிகரம் செய்து இருக்கிறது , இது பற்றி பிரதமர் துளி கூட கவலைபடாமல் எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் . கொஞ்சமும் வெட்கம் இன்றி.

எல்லைதாண்டிய அச்சுறுத்தல் என்பது இப்போது தொடர்கிறது. இது பற்றி அரசு வெறும் அனுதாப அல்லது கண்டன அறிக்கை வெளியிடுவதுடன் சரி. கனவு மெய்ப்பட வேண்டும் என்பது சுதந்திர ரீதியாக புலவர் சொன்னது.அப்துல்கலாம் கனவு மெய்பட வேண்டிய கனவு. ஆனால் அதற்கு இப்போதைய அரசு தொடர கூடாது . இது எது பற்றியும் கவலைபடாத - மக்கள் மீது எந்த கரிசனமோ அக்கறையோ காட்டாத அரசு அகற்றபட வேண்டும் .

மக்களுக்காக மக்கள் அரசு வந்தால் தான் அப்துல்கலாம் கனவு நிறைவேறும். அந்த மக்கள் அரசு தரபோகும் அரசியல் கட்சி எது ?..... யாருக்கு தெரியும்..?.