M. Trotsky Marudu
Freelancer Painter, Illustrator and Special Director for Films

Home

வலைதளம்

Blogs - நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும் - ஈழத் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

நாடு பாதுகாப்புக் கொடுக்காத மொழி மெல்ல அழிந்துபோகும் - ஈழத் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

Posted on Nov. 21, 2011 01:18:11
திரு.அ.முத்துலிங்கம் அறுபகளிலிருந்து தொடர்ந்து எழுதி வரும் மிக முக்கியமான ஈழத் எழுத்தாளர். தற்போது கனடாவில் வசித்து வரும் அ. முத்துலிங்கம் எண்ணற்ற சிறுகதைகள் எழுதியவர். அதைத் தவிர பல கட்டுரைகள், பேட்டிகள், விமர்சனங்கள், மற்றும் நாவல்கள் எழுதியவர். 'தீராநதி' இலக்கிய இதழுக்காக கிருஷ்ணா டாவின்ஸிக்கு அவர் அளித்த பேட்டி இப்போ 'அந்திமழை' வாசகர்களுக்காக.

தற்போது இலங்கையில் தமிழ் புத்தகம் வைத்திருப்பதும், படிப்பதும் குற்றம் என்று கருதப்படுவதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி விரிவாகச் சொல்லமுடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புக்கு போய்வந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் சில தமிழ் புத்தகங்கள் கொண்டு வரும்படி செல்லியிருந்தேன். அந்தச் சாதுவான பெண்ணும் சம்மதித்து புத்தகங்களை வாங்கி விமான நிலையத்துக்கு எடுத்து போனார். அங்கே அவரை அதிகாரிகள் பல
கேள்விகள் கேட்டு தொல்லை கொடுத்தார்கள். என்ன புத்தகம், அதிலே என்ன இருக்கிறது, யாருக்கு எடுத்துப் போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள். அவர் பயந்துவிட்டார். சூட்கேசை தலைகீழாகக்
கொட்டி ஆராய்ந்தார்கள். கடைசியில் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்தபோது அவரை விடுவித்தார்கள்.
ஆனாலும் சில வாரங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த தகவல் எனக்கு ச்சரியமாகத்தான் இருந்தது. 'இங்கே இப்பொழுது தமிழ் புத்தகத்தை
வைத்திருப்பதே ஆபத்து. அதை ஏன் வைத்திருக்கிறீர்கள், அதிலே என்ன எழுதியிருக்கிறது என்றெல்லாம் ராணுவம் கேள்வி கேட்கிறது' என்று எழுதியிருந்தார். நான் இதை என் நண்பரிடம்
சொன்னபோது அவர் இது வழக்கமாக நடப்பதுதான் என்றார். காவல் அரண்களில் இருக்கும் ராணுவம் யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படும். அவர்களுக்கு பதில் சொல்லி லேசில் திருப்திப் படுத்தமுடியாது..
யாராவது தமிழ் புத்தகத்தை அல்லது சஞ்சிகையை காவினாலோ அவர் உடனே பயங்கரவாதி
ஆகிவிடுகிறார். அகப்பட்ட ஆளை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (Terrorism Investigation Division)
கொண்டு போவார்கள். அப்படி போனவர்களில் பலர் திரும்பி வருவதே இல்லை.அந்த நண்பர் இன்னும் ஒரு விசயத்தையும் சொன்னார். கனடாவில் கணவன் வெளிநாட்டிலிருக்கும் மனைவியை ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம்.ஆனால் மனைவி வன்னியை
சேர்ந்தவரென்றால் ஸ்பொன்சர் செய்யவே முடியாது. போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற்றால்தான் கனடாவுக்கு வரமுடியும். வன்னியில் பிறந்தவருக்கு சான்றிதழ் எப்படி கிடைக்கும்? இதுதான் இன்றைய நிலை.


ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னரே புலம் பெயர்ந்துவிட்டார்கள். இன்று அங்கே நிகழ்பவற்றை ஆவணமாக்கவோ, இலக்கிய ரீதியில் பதிவு
செய்யவோ எழுத்தாளர்கள் இல்லை என்பது உண்மையா?

சமீபத்தில் கனடா தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஈழத்து எழுத்தாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொடுத்த பேட்டியை கனடாவில் ஒளிபரப்பினார்கள். இவர் பதினைந்து
வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுதினார். முற்றிலும் போர்ச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலையில், தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது
எவ்வளவு பெரிய விசயம். நூலை முடித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்காக அலைந்தார். சரிவரவில்லை.இந்தியா சென்று பதிப்பகம் பதிப்பகமாக ஏறி இறங்கினார். ஒருவருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர்
தன் வாழ்நாள் சேமிப்பை செலவழித்து புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மனம் துணுக்கென்றது. ஒருவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணம் செய்து
நூலை எழுதியது மட்டுமில்லாமல் தன் சேமிப்பையும் கொடுத்துத்தான் புத்தகத்தை வெளியிடவேண்டும் என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது. இதுதான் இன்றைய ஈழத்து எழுத்தாளரின் நிலை.
ஒன்றைப் பதிப்பித்தால் தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழுத்தாளர்தான்; எழுதாமல் சிந்தித்தாலும் எழுத்தாளர்தான். புலம் பெயர்ந்த சூழலில் என்ன நடக்கிறது என்றால் அதிக வசதிகள் உண்டு. ஒரு கணினியும் சிறு பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம்
போட்டுவிடலாம். இணையம் வந்த பிறகு நூற்றுக்கணக்கானோர் இணைய தளங்களில் எழுதி தங்கள் எழுத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். உலகம் அவர்கள் எழுத்தை படிக்கிறது. உடனுக்குடன் எதிர்வினை
கிடைப்பதால் எழுத்தாளர் தன்னை மேம்படுத்திக்கொள்ள நல்ல வசதி கிடைக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் அதிக எழுத்தாளர்கள் உருவாவதற்கு இதுவே முக்கிய காரணம்.யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வாசகர் என்னை அழைத்து பேசினார். அவர் எல்லா தீவிரமான
இலக்கியப் பத்திரிகைகளையும் பசியோடு படிக்கிறார். அது எப்படி என்று கேட்டேன். அவர்களுக்கு ஆறுமாதம் பிந்தித்தான் பத்திரிகைகள் கிடைக்கின்றன என்றாலும் அவர் ஒன்றையும் விடுவதில்லை.
எழுதுகிறீர்களா என்று கேட்டேன். எழுதி எழுதி வைத்திருக்கிறேன். எங்கே, எப்படி அனுப்புவது என்பதுதான் பிரச்சினை என்றார்.
ஆனால் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று சொல்வது சரியாகாது. தலை சிறந்த எழுத்தாளர்கள் இன்னமும் ஈழத்தில் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள்.
ஆனால் அவை எமக்குக் கிடைப்பதில்லை. மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப்,
செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
கல்வியாளர்களில் கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள்
நம்பிக்கை நட்சந்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.